Sri Paduka Sahasram - Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி (ச்லோகம் 159)

Paththati 6 - அதிகார பரிக்ரஹ பத்ததி

ராமம் த்வயா விரஹிதம் பரதம் ச தேந த்ராதும் பதாவநி ததா யத் அபூத் ப்ரதீதம் ராமாநுஜஸ்ய தவ ச அம்ப ஜகத் ஸமஸ்தம் ஜாகர்த்தி தேந கலு ஜாகரண வ்ரதேந

இராமனின் திருவடிகளை அவனது தாய் போன்று பாதுகாக்கும் பாதுகையே! உன்னைப் பிரிந்த இராமனை, இலட்சுமணன் எப்போதும் விழித்துக் கொண்டு காப்பது என்ற விரதம் பூண்டான். இராமனைப் பிரிந்த உள்ள பரதனையும், நாட்டையும் காப்பது என்று நீ உறுதி பூண்டாய். இதனால் அன்றோ இந்த உலகங்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பாக உள்ளன?

இராமனைக் கானகத்தில் கண் உறங்காமல் இலட்சுமணன் காத்தான். இது அவனுடைய தாயின் ஆணையாகும். அவள் இலட்சுமணனிடம், “இராமனின் நடை அழகில் மயங்கி நின்றுகூட நீ அவனைக் காக்காமல் இருந்துவிடாதே”, என்றாள். இராமனை இலட்சுமணன் எப்படிக் காத்தானோ, அதைவிட அதிகமாகப் பாதுகை பரதனைக் காக்க முடிவுசெய்தாள். பரதனை மட்டும் அல்லாமல், அவனது நாட்டையும் காப்பாற்றினால் அல்லவோ, முழுமையான காப்பாற்றுதல் ஆகும்?