Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 79)

Paththati 3 - ப்ரபாவ பத்ததி

ராம பாத ஸஹ தர்ம சாரிணீம் பாதுகே நிகில பாதகச்சிதம் த்வாம் அசேஷ ஜகதாம் ஈச்வரீம் பாவயாமி பரதாதி தேவதாம்

பாதுகையே! நீ பரதன் ஆராதனை செய்வதற்கு ஏற்ற இராமனின் பாதுகையாக உள்ளாய். உன்னை இராமன் எப்போதும் தனது திருவடிகளில் வைத்துள்ளான். அனைத்து பாவங்களையும் நீ (இராமனின் தொடர்பு உள்ளதால்) போக்குகிறாய். இப்படியாக நீ இந்த உலகத்தின் எஜமானியான மஹாலக்ஷ்மி போன்று உள்ளாய்.

எம்பெருமான் எடுக்கும் திருஅவதாரங்களிலே அவனுடன் பெரியபிராட்டியும் அவதரிப்பது வழக்கம் ஆகும். அவ்விதமாக அவள் தோன்றும்போது, இந்த உலகில் உள்ளவர்களின் பாவங்களை விலக்குவதும் வழக்கம் ஆகும். இதனையே பாதுகையும் செய்வதால், பாதுகைக்கு பெரியபிராட்டியாரை உவமையாகக் கூறுகிறார். இங்கு ஒரு கேள்வி எழலாம் - பாதுகையை மஹாலக்ஷ்மியுடன் உவமித்துக் கூறியது சரியா? இது சரியே, பாதுகையின் செயலானது பெரியபிராட்டியின் செயலைக் காட்டிலும் உயர்ந்தே இருந்தது. எப்படி என்றால் - அவனை விட்டுப் பிரியாதவர்கள் பெரியபிராட்டியும் பாதுகையும் ஆவர். ஆனால், நாட்டு மக்களின் நலன் கருதியும், பரதன் மீது கொண்ட வாத்ஸல்யம் காரணமாக, இராமனைப் பிரிந்து பாதுகையன்றோ பரதனுடன் வந்தாள்?