Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 38)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
மாத: பாதுகே தவ குணாந் க: ஸ்தோதும் அஸ்தோகதீ: கோடீரேஷு யதர்பண ப்ரணயிநாம் ஸேவாக்ஷணே ஸ்வர்க்கிணாம் அந்யோந்யம் க்ஷிபதாம் அஹம் ப்ரதமிகா ஸம்மர்த்த கோலாஹலம் விஷ்வக்ஸேந விஹார வேத்ரலதிகா கம்ப: சிராத் லும்பதி.
மாதவனாகிய க்ருஷ்ணனின் பாதுகையே! அனைவருக்கும் தாய் போன்றவளே ! உனது குணங்கள் முழுவதையும் நன்கு உணர்ந்து, உன்னைத் துதிபாடும் அறிவு கொண்டவர்கள் யார் உள்ளனர்? உனது நாயகனான நம்பெருமாளைத் தேவர்கள் வணங்க வருகின்றனர். அப்போது உன்னைத் தங்கள் தலையில் ஏற்றுக்கொள்வதற்காக அவர்கள், “நான் முந்தி, நீ முந்தி” , என்று போட்டி போடுகின்றனர். இதனால் அங்கு பெரும் சப்தம் ஏற்படுகிறது. விஷ்வக்சேனர் தனது கையில் விளையாட்டிற்காக வைத்துள்ள பிரம்பைக் காண்பித்து, சிரமப்பட்டு இவர்கள் எழுப்பும் சப்தத்தை அடக்குகிறார். இப்படிப்பட்ட தேவர்களாலும் உன்னைத் துதிக்க இயலாது.
நம்பெருமாளின் திருமுன்பாகப் பலரும் சடாரியைப் பெற்றுக் கொள்வதற்காக முண்டியபடி வருவார்கள். அப்போது அங்கு பெரும் கூட்ட நெரிசல் உண்டாகிறது. இவ்விதம் நாம்தான் வருகிறோம் என்பது இல்லை, தேவர்களும் நிற்கின்றனர். இந்நிலையில் அங்கு வரும் விஷ்வக்சேனர் தேவர்களிடம், “நம்பெருமாள் இந்த மனிதர்கள் மீது உள்ள வாத்ஸல்யத்தினால் இங்கு வந்தவன் ஆவான். ஆகவே அவனது சடாரியைப் பெறுவதற்கு அவர்களுக்கே முதலிடம்”, என்று வரிசைப்படுத்தியபடி உள்ளார்.