Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம் (பத்தி 2)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம்

ஆசார்யனுக்குச் செய்யவேண்டிய கைம்மாறு ஏதும் இல்லை

மூலம் - இவ் அர்த்தங்களையெல்லாம் மிடியனுக்கு அகத்துக்குள்ளே மஹாநிதியைக் காட்டிக் கொடுக்குமாப் போலே வெளியிடுகையாலே மஹோபகாரகனான ஆசார்யன் திறத்தில் சிஷ்யன் : (1) க்ருதஜ்ஞனாயிருக்க வேண்டுமென்றும், த்ரோஹம் பண்ணாதொழிய வேண்டுமென்றும் சாஸ்த்ரங்கள் சொன்னவிடம், இரண்டு விபூதியும் விபூதிமானும் இவனைச் சீச்சீயென்னும்படியுமாய், ஹிதம் சொன்ன ப்ரஹ்லாத விபீஷணாதிகளுக்குப் ப்ரதிகூலரான ஹிரண்ய ராவணாதிகளோடு துல்யனுமாய், “வித்யாசோரோ குருத்ரோஹீ வேதேச்வர விதூஷக: | த ஏதே பஹுபாப்மாந: ஸத்யோ தண்டயா இதி ச்ருதி:” என்கிறபடியே தண்டயனுமாகாமைக்காகவத்தனை. ப்ரத்யுபகாரம் சொன்னபடியன்று.

– இவ்விதமாக உள்ள பல விஷயங்களை, “செல்வம் ஏதும் அற்றவனாக உள்ள ஒருவனுக்கு, அவனுடைய வீட்டிலேயே உள்ள புதையலைக் காட்டிக் கொடுத்தல்” என்பது போன்று, ஆசார்யன் மிகப் பெரிய உபகாரத்தைச் செய்கிறார். அவருடைய விஷயத்தில் சிஷ்யன் எப்படி இருக்கவேண்டும்: (1) செய்ந்நன்றி அறிந்தவனாக இருக்கவேண்டும் என்றும், அவருக்கு ஒருபோதும் துரோகம் செய்தல் கூடாது என்றும் சாஸ்த்ரங்கள் கூறுகின்றன. இவ்விதம் கூறப்பட்டது ஏன்? நித்யவிபூதி மற்றும் லீலாவிபூதியில் உள்ளவர்களும், இந்த இரண்டு விபூதிகளுக்கும் எஜமானனாகிய ஸர்வேச்வரனும் இந்தச் சிஷ்யனை வெறுத்து தள்ளக்கூடாது என்பதற்காகவும்; நன்மைகளை மட்டுமே எடுத்துரைத்த ப்ரஹ்லாதன் மற்றும் விபீஷணன் விஷயத்தில் ஹிரண்யன் மற்றும் இராவணன் நடந்து கொண்டது போன்று இவன் இருத்தல் கூடாது என்பதற்காகவும்; வித்யாசோரோ குருத்ரோஹீ வேதேச்வர விதூஷக: | த ஏதே பஹுபாப்மாந: ஸத்யோ தண்டயா இதி ச்ருதி: - ஆசார்யனின் அனுமதி இல்லாலம் அவருடைய உபதேசங்களைக் கேட்டு வித்யையைத் திருடுதல், அவருக்குத் துரோகம் செய்பவன், வேதம் மற்றும் ஈச்வரனை தூஷிப்பவன் ஆகியவர்கள் மிகுந்த பாபப் செய்தவர்கள் ஆவர். இவர்களை உடனேயே தண்டிக்கவேண்டும் என ச்ருதி கூறுகிறது – என்பதற்கு ஏற்ப அந்தச் சிஷ்யன் தண்டனை பெறும் நிலையை அடையக்கூடாது என்பதற்காகவுமே ஆகும். மாறாக, “செய்ந்நன்றி அறிந்தவனாக இருக்கவேண்டும், அவருக்கு ஒருபோதும் துரோகம் செய்தல் கூடாது” என்னும் தன்மைகளால் அவருக்கு ப்ரதி உபகாரம் செய்தலே கூறப்பட்டது என்று கருத்து அல்ல.