Tattva Trayam - முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம் (சூர்ணை 17)

முதல் ப்ரகரணம் – சித் ப்ரகரணம்

ஒருவன் ஏக காலத்திலே அநேக தேஹங்களைப் பரிக்ரஹிக்கிறதும் ஜ்ஞாந வ்யாப்தியாலே.

– ஏக சரீரமாத்ரத்துக்கிப்படி கொண்டாலும், ஒருவன் ஏக காலத்திலே அநேக தேஹங்களைப் பரிக்ரஹிக்கிறது ஸ்வரூப வ்யாப்தியாலேயாக வேணடாவோவென்கிற சங்கையிலே யருளிச் செய்கிறார் (ஒருவன்) என்று தொடங்கி.

ஒரு சரீரம் என்பதற்கு மட்டுமே இவ்விதம் கொண்டாலும், ஒருவன் ஒரே நேரத்தில் பல சரீரங்களை எடுத்தல் என்பது, ஆத்மாவின் ஸ்வரூபமானது எங்கும் பரவி நிற்கும் தன்மையால் உண்டாக வேண்டாமோ என்ற சந்தேகத்திற்கு விடை அருளிச்செய்கிறார்.

ஒருவனுக்கே அநேக தேஹ பரிக்ரஹம் கால பேதத்தாலே ஸம்பவிக்குமிறே; அத்தை வ்யாவர்த்திக்கைக்காக “ஏக காலத்திலே” என்கிறது. ஏக காலே அநேக தேஹ பரிக்ரஹம் ஸௌபரி ப்ரப்ருதிகள் பக்கலிலே ஸம்ப்ரதிபந்நமிறே.

ஒருவனுக்கே பல சரீரங்கள் பல காலகட்டங்களில் எடுத்துக் கொள்ளுதல் என்பது உண்டாகலாம். அதனை வேறுபடுத்தி உரைப்பதற்காகவே “ஒரே நேரத்தில்” என்றார். ஒரே நேரத்தில் பல சரீரங்கள் கிட்டுதல் என்பது ஸௌபரி முனிவர் முதலானவர்கள் விஷயங்களில் அனைவராலும் ஏற்கப்பட்டது அல்லவோ?